25. ஒருத்தி மகனாய்…
25. ஒருத்திமகனாய்..
#மார்கழியின்_மறை
கவிஞர் கண்ணதாசன் கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஆண் ஆண்டாள்! கண்ணன் மேல் கொண்ட அன்பால் முத்தையா என்னும் தன் இயற்பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டவர். தனித் துவம்மிக்க பல கவிதைகளை எழுதியவர் ஆண்டாளின் வரிகளையும் உரிமையுடன் தன் பல பாடல்களில் எடுத்துக் கொண்டார்.
தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் இடம் பெறும் “ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்” என்ற இந்தப் பாடல் கவிஞரின் சொந்த வாழ்க்கைப் பற்றிய பாடல் என்போரும் உண்டு. முத்தையா என்ற கண்ணதாசன் பெற்ற தாய் தந்தையரால் சுவீகாரம் கொடுக்கப்பட்டவர்! அவர் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவர் என்பார்கள்.
எது எப்படியோ கண்ணனது வாழ்வும் கண்ணதாசன் வாழ்வும் ஒன்றுபோல அமைந்தது விட்டது ஆச்சரியம் தான்! ஆண்களில் பிறந்தவீடு ஒன்று புகுந்த வீடு ஒன்று எனப் பிறந்து வாழ்ந்த அவதாரம் கண்ணன் தான்! அதுவும் பிறந்த அந்த இரவே தான் பிறந்த இடத்தில் இருந்து வளரும் இடத்திற்கு மாற்றப்பட்டவன். தேவகி என்னும்..
ஒருத்திக்கு பிறந்து யசோதை என்னும் ஒருத்தியிடம் ஒளிக்கப்பட்டு வளர்ந்த ஒப்பில்லாதவன். கண்ணனின் தாய்மாமன் கம்சன் தனது தங்கையின் குழந்தையால் உனக்கு மரணம் வரும் என்றறிந்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை எல்லாம் கொல்ல இவன் மட்டும் அங்கிருந்து தப்பியவன். கண்ணன் இறக்கவில்லை அவன்..
உயிருடன்தான் இருக்கிறான் என்பதையறிந்த கம்சன் ஒரு கஞ்சனின் வயிறு எரிவது போல பரிதவித்தான் என்கிறார் ஆண்டாள். உலகில் கஞ்சனின் வயிற்றெரிச்சல் தான் முதலானது என்பதற்கு இதைவிட சிறந்த உவமை இருக்க முடியுமா! அந்த வயிற்றெரிச்சலில் அவன் உனக்கிழைத்த தீங்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கினாய்..
வானுக்கும் மண்ணுக்கும் நெடுந்துயர்ந்த திருமாலே உன்னை நினைத்து உருகி நாங்கள் வேண்டி விரும்பும் பறையை நீங்கள் எங்களுக்கு அருளினால் அதையிசைத்து உம் வீரத்தை, செல்வத்தை வாயாரப்பாடி எங்கள் வருத்தங்களைத் தொலைத்து மகிழ்வோம். கண்ணனை வாயாரப் பாடினாலே வருத்தங்கள் தொலையுமாம்.
கண்ணனின் விளம்பரத் தூதுவரான ஆண்டாள் எல்லா பாசுரத்திலும் சுற்றி வளைத்து சொல்ல வருவது ஒன்றே ஒன்றை மட்டும் தான்! கண்ணனை நினைத்து அவன் பாதங்களில் சரணாகதி ஆகி அவனது புகழை, அவனது வீரதீரத்தை மனமுருகப் பாடி துதித்தால் உங்கள் "கீர்த்திக்கு நான் கேரண்டி" என உத்திரவாதம் அளிக்கிறார்.!
மார்கழி 25 ஆம் நாள் பாடல்...
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
Comments
Post a Comment